வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 3ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாய கட்சி வேட்பாளர் ஜோ பிடென் போட்டியிடுகிறார். அதேபோல் துணை அதிபர் பதவிக்கு மைக் பென்ஸ் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அமெரிக்காவில் தேர்தல் தேதிக்கு முன்பாகவே வாக்களிப்பதற்கான வசதி உள்ளது. கொரோனா வைரஸ் நோய் பரவல் அச்சுறுத்தலுக்கு இடையே அதிக அளவிலான மக்கள் முன்கூட்டியே வாக்களிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்கூட்டியே தேர்தலில் இதுவரை 5.87 கோடி மக்கள் அதிபர் தேர்தலில் வாக்களித்துள்ளனர். இது கடந்த 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது முன்கூட்டியே பதிவான 5.83 கோடி வாக்குகளை விட அதிகமாகும். அதிபர் தேர்தல் வாக்குகள் எண்ணுவது பல மணி நேரங்கள் நீடிக்கப்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட வாக்குகள் எண்ணிக்கை அடுத்த நாள் காலை, அல்லது பிற்பகல் வரை நீடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.