மைசூர் தசரா விழாவில் எளிமையாக நடந்த யானை ஊர்வலம்

பெங்களூரு: மைசூர் தசரா விழாவில் யானைகள் ஊர்வலம் மிக எளிமையாக நடந்தது. கர்நாடகாவில் உலகப் புகழ்பெற்ற தசரா விழா கடந்த 17ம் தேதி தொடங்கியது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இவ்வாண்டு கலை நிகழ்ச்சிகள் உள்பட பல முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால், நவராத்திரியின் 9 நாட்கள் நடக்க வேண்டிய விழாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது. விழாவின் இறுதி நாளான நேற்று விஜயதசமியை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க யானைகள் ஊர்வலம் நடந்தது. முதல்வர் எடியூரப்பா யானைகள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலம் 45 நிமிடம் மட்டுமே நடந்தது.

கடந்த 12 ஆண்டுகளாக தசரா விழாவில் பங்கேற்று வந்த அபிமன்யு என்ற யானை இவ்வாண்டு முதல் முறையாக 700 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரிதேவி ஊர்வலமாக அழைத்து சென்றது. அபிமான்யுவுடன் விஜய் மற்றும் காவேரி ஆகிய இரு யானைகள் ஊர்வலத்தில் பங்கேற்றது. 5.5 கி.மீட்டர் செல்ல வேண்டிய ஊர்வலம் 450 மீட்டர் தூரம் மட்டும் அரண்மனை வளாகத்திற்குள் நடந்தது. தசரா முன்னிட்டு மைசூரு மாநகரம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. யானை ஊர்வலத்தை காண வந்திருந்த பலர் ஏமாற்றமடைந்தனர்.

Related Stories: