×

தாமதமாகும் உள்ஒதுக்கீடு மசோதா: ஆளுநர் பன்வாரிலாலை பிற்பகல் 3.30 மணிக்கு சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி..!!

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை பிற்பகல் 3.30 மணிக்கு முதல்வர் பழனிசாமி சந்தித்து பேச உள்ளார்.  நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி மற்ற மாநிலங்களில் மருத்துவ கலந்தாய்வுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டு மசோதா மீதான ஆளுநரின் முடிவு வரும் வரை, கலந்தாய்வு குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படமாட்டாது எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துவிட்டது.

கலந்தாய்வு மற்றும் 7.5சதவிகித உள் ஒதுக்கீடு முடிவு ஆகியவற்றை எதிர்நோக்கி மாணவர்கள் காத்திருக்கும் நிலையில், அக்டோபர் 20ஆம் தேதி, ஆளுநரைச் சந்தித்த செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 அமைச்சர்கள், 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

அப்போது ஆளுநர் இவ்விவகாரம் தொடர்பாக விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்று கூறியதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர். அவர்கள் சந்தித்து இன்றுடன் 2 நாள் ஆகிவிட்ட நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் அமைதியாகவே இருக்கிறார். இந்நிலையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கினால், 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்கத் தயார் என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, உயர் சாதியினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்குத் தமிழக அனுமதி மறுத்தது. இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் உயர் சாதியினருக்கு மற்ற பிரிவினரைக் காட்டிலும் கட் ஆஃப் மதிப்பெண் குறைவாக நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்துவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று மாலை ஆளுநரை சந்தித்து பேச உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Palanisamy ,Banwarilal , Allocation, by Governor Banwarilal, Chief Minister Palanisamy
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...