மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 20 ஆயிரம் கனஅடியாகவும், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 17,129 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 18,694 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. பாசனத்திற்கு 9,800 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதையடுத்து நேற்று காலை 99.39 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 100 அடியை எட்டியது. நீர் இருப்பு 64.05டிஎம்சியாக உள்ளது. நடப்பாண்டில் முதன்முறையாக செப்டம்பர் 25ம் தேதியும், 2வது முறையாக கடந்த 13ம் தேதியும், தற்போது 3வது முறையாகவும் 100 அடியை எட்டியது.