கேடிசி நகர்: போலீசுக்கு தகவல் அளிக்கும் ‘இன்பார்மர்’ நெல்லை அருகே நேற்று அதிகாலை பாறாங்கல்லை தலையில் போட்டும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சியை அடுத்த உடையார்குளத்தைச் சேர்ந்தவர் பரமசிவன் (45). போலீஸ் ‘இன்பார்மராக’ செயல்பட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வெளியே கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை ஒரு கும்பல் அவரது தலையில் பாறாங்கல்லை தூக்கிப் போட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்து விட்டு தப்பியது. தகவலறிந்து தாழையூத்து போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.
பரமசிவன் மணல் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சில ரவுடிகள் போலீசாரால் கைது செய்யப்படும் போது, போலீசார் இவரிடம் புகார் வாங்கி வழக்குப் பதிவு செய்துள்ளனர். மணல் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து குறித்து போலீசுக்கு தகவல் அளித்ததால் இவர் கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.