வேலூர்: தமிழக முதல்வர் ஓபிஎஸ் என்று ஆரணியில் நடந்த அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் எம்எல்ஏ பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூரில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் கூட்டம், அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. அதில், அதிமுக இளைஞர் பாசறை மாநில செயலாளரான வேடச்சந்தூர் எம்எல்ஏ பரமசிவம், செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், கலசபாக்கம் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே.மோகன் பேசுகையில், ‘தமிழகத்தின் முதல்வர் அம்மாவின் அம்மா இறந்ததை தொடர்ந்து, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்துக்கு நேரில் சென்று நாங்கள் அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தினோம்’ என்றார்.
அதைத்தொடர்ந்து, பேசிய கலசபாக்கம் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம், கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான ஓபிஎஸ் கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்தி வருகிறார் என்றார். அதிமுகவில் இரட்டை தலைமையால் ஏற்பட்டுள்ள குழப்பத்தில் இருந்து எம்எல்ஏக்கள் இன்னும் மீளவில்லை என கட்சியினர் வேதனையுடன் தெரிவித்தனர்.