சென்னை, : ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 9வது முறையாக மேலும் 3 மாதம் கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் 2017ம் ஆண்டு செப்டம்பர் 25 ம் தேதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும் 3 மாதத்திற்குள் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து ஆணையத்தின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், மருத்துவ குழு அமைத்து விசாரணை செய்ய அப்போலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கில் நீதிமன்றம் ஆறுமுகசாமி விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையும் நிலுவையில் இருக்கிறது. ஆறுமுகசாமி விசாரணைக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி முடிவடைந்த நிலையில் 8வது முறையாக 4 மாதம் கால நீட்டிப்பு செய்து அக்டோபர் 24ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. மூன்று மாதத்தில் அறிக்கை சமர்பிக்க உத்தரவு பிறக்கப்பட்டு, பல்வேறு காரணமாக 34 மாதங்கள் முடிந்து விட்டது. இந்நிலையில் 8-வது முறையாக நீட்டிப்பு முடிவடையுள்ள நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 9வது முறையாக மேலும் 3 மாதமாக கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.