புதுடெல்லி: தமிழகம் உட்பட 16 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ₹6,000 கோடியை மத்திய அரசு கடன் வாங்கி வழங்கியுள்ளது. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தியதால், மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில், 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால், ஜிஎஸ்டி வருவாய் குறைவதால் இழப்பீடு வழங்குவதில் தாமதம் செய்து வருகிறது. இதனால், மாநிலங்களுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு, தவித்து வருகின்றன. இதனால், ‘சந்தையில் இருந்து ₹1.1 லட்சம் கோடி திரட்டி, மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும்,’ என மத்திய அரசு கடந்த வாரம் தெரிவித்தது.