×

அம்பத்தூர், ஆவடி பகுதியில் பைக்குகளை திருடிய 3 பேர் சிக்கினர்: 33 வாகனங்கள் பறிமுதல்

ஆவடி: அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் வீடு, கடை முன்பு நிறுத்தி  வைத்திருந்த பைக்குகளை திருடிய 3 பேர்களை போலீசார் கைது செய்தனர். மேலும்,   அவர்களிடமிருந்து 33 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் பகுதிகளில் வீடு மற்றும் கடைகள் முன்பு நிறுத்திய இரு சக்கர  வாகனங்கள் திருடப்பட்டு வந்தன. இது குறித்து பொதுமக்கள் சார்பில் அந்தந்த  காவல் நிலையங்களுக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து, அம்பத்தூர் போலீஸ்  துணை கமிஷனர் தீபாசத்யன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை  குறித்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.

  இதில், பழைய  குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். மேலும், பைக் திருடு போன  இடங்களில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் குற்றவாளிகளின்  உருவத்தை வைத்தும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், ஆவடியை அடுத்த  திருநின்றவூர், பெரியார் நகர், திருவள்ளுவர் 3வது தெருவைச் சார்ந்த  கார்த்திக் (29), திருநின்றவூர், பாண்டியன் ரைஸ்மில் தெருவைச் சார்ந்த  மணிகண்டன் (21),  திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு, கந்தன்கொல்லை கிராமத்தை  சார்ந்த கார்த்திக் (38) ஆகியோர் குற்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.  இதனையடுத்து தனிப்படை எஸ்.ஐ. விஜயகுமார் தலைமையில் காவலர்கள் தலைமறைவாக  இருந்த மூவரையும் நேற்று சுற்றிவளைத்து பிடித்தனர்.

 பின்னர், அவர்கள்  கொடுத்த தகவலின் அடிப்படையில் அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம் ஆகிய  சரகங்களில் உள்ள  பல்வேறு இடங்களில் இருந்து 18பைக்குகளை போலீசார் பறிமுதல்  செய்தனர். மேலும், போலீசார் இவர்களை கைது செய்து வேறு ஏதும்  குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளனரா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதோடு  மட்டுமில்லாமல், அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்  திருடப்பட்டு ஆங்காங்கே விட்டு சென்ற 15 பைக்குகளையும் போலீசார் பறிமுதல்  செய்தனர். இது தொடர்பாக, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும்,  சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளையும், பைக்குகளையும் பறிமுதல் செய்த  தனிப்படை போலீசாரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார்  பாராட்டியுள்ளார்.

Tags : Ambattur ,persons ,area ,Avadi , Ambattur: Three persons have been arrested for stealing bikes in the Avadi area. 33 vehicles have been seized
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...