தன்னை முன்னிலைப்படுத்த ராமதாஸ் ஆயிரம் கருத்து சொல்லலாம்: அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

சென்னை: அதிமுக கூட்டணியில் எல்லோரும் ஒன்றுபட்டு இருக்கிறோம். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள ராமதாஸ் ஆயிரம் கருத்துகளை சொல்லலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இதுகுறித்து, அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திராவின் ஜெகன்மோகன் ரெட்டி சொன்னதை செய்கிறார். ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை என்று ராமதாஸ் கூறியிருப்பதால் கூட்டணியில் பிளவா என கேட்கிறீர்கள். கூட்டணியில் எல்லோரும் ஒன்றுபட்டு இருக்கிறோம். கருத்து சொல்ல ஒவ்வொரு கட்சிக்கும் உரிமை உண்டு.

கருத்து, கொள்கைகள் மாறுபடலாம். ஆகையால் கூட்டணி  உடைந்துவிட்டது என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஒட்டுமொத்தமாக அகில இந்திய அளவில் புள்ளி விவரங்களை எடுத்து பார்த்தால், தொழில், உள்கட்டமைப்பு வசதிகள், துறை வளர்ச்சி உள்பட அனைத்து வளர்ச்சிகளிலும் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது. அதில் ஆந்திரா இடம் பெற்று இருக்கிறதா, யார் யாருடன் ஒப்பிடுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். தமிழகம் தனித்தன்மை வாய்ந்த மாநிலம். நம் மாநிலம் தான் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: