கலைஞர் அரசு அமையும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது: வேலைவாய்ப்பு முகாமை தொடங்கிவைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழகத்தில் கலைஞர் அரசு அமைவதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருப்பதாக இலவச வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சியை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் ‘வெங்கடேஷ்குமார் மெமோரியல் டிரஸ்ட்’ சார்பில் நடைபெற்ற இலவச வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சியைக நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகத் தலைமையேற்று துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்த நாட்டில் இப்போது எது பஞ்சமாக இருக்கிறது என்றால் வேலைக்குத் தான் பஞ்சமாக இருக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தோற்று விட்டார்கள். ஏற்கனவே இருந்த நிறுவனங்களைக் காப்பாற்றுவதிலும் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் வேலை வாய்ப்பு முகாமில் நீங்கள் பங்கெடுக்க வந்திருப்பது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரியது. முகாமில் 3000 வேலைவாய்ப்புகள் என்று அறிவித்துள்ளார்கள். இது உங்களது வாழ்க்கையின் மிக நல்ல தொடக்கம். முன்னேற்றத்துக்கு முதல் படி. இதில் முதல் தலைமுறை பட்டதாரிகள் இருப்பீர்கள். உங்களது ஊதியத்தை நம்பி உங்கள் குடும்பம் காத்திருக்கலாம். ஏராளமான கடமைகள் உங்களுக்குக் காத்திருக்கின்றன. இவை அனைத்துக்கும் ஒரு தொடக்கப்புள்ளியாக இந்த வேலைவாய்ப்பு முகாம் என்பது அமைந்துள்ளது.

அனைவரும் படிக்க வேண்டும்; அனைவரும் வேலைக்குப் போக வேண்டும்; கல்வி, வேலைவாய்ப்பைப் பெறுவதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதம் இருக்கக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் திராவிட இயக்கம்.

அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்பதை தன்னுடைய ஆட்சியின் இலக்கணமாக தலைவர் கலைஞர் வைத்துக் கொண்டார். தமிழகத்தில் ஏராளமான பள்ளிக்கூடங்களைத் திறந்தது பெருந்தலைவர் காமராசர் என்றால், ஏராளமான கல்லூரிகள் திறந்து வைத்தவர் தலைவர் கலைஞர் தான். ஐ.டி.க்கு எனத் தலைமைச் செயலகத்தில் தனித்துறையை 1998ல் உருவாக்கினார். முதலமைச்சர் தலைமையில் ஐ.டி டாஸ்க் போர்ஸ் உருவாக்கினார்.

இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக ஐ.டி பாலிசியை தமிழகம் தான் உருவாக்கியது. அரசுத்துறையை கம்ப்யூட்டர் மயமாக்க முனைந்தார். பள்ளிக் கல்வியில் தகவல் தொழில்நுட்பத்தை இணைத்தார். தமிழ் மென்பொருளை உருவாக்கிப் பரப்ப முனைந்தார். ரூ.340 கோடியில் டைடல் பார்க்கை 2000ம் ஆண்டில் கட்டினார். கிண்டி முதல் கேளம்பாக்கம் வரை சைபர் காரிடார் அமைத்தார். சிறுசேரியில் வன்பொருள் - மென்பொருள் பூங்கா அமைத்தார். தரமணி முதல் பழைய மாமல்லபுரம் வரையிலான சாலையை ஐ.டி ஹைவே ஆக்கினார்.

தமிழ்நெட் 1999 மாநாடு நடத்தினார். யுனிக்கோட் கன்சோர்டியத்தில் இணைந்த முதல் இந்திய மாநிலம் தமிழகம். உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கினார். அரசு மேனிலைப்பள்ளிகளில் கணினி மையங்களை உருவாக்கினார். கல்லூரிகளிலும் கணினிப் பயிற்சி தொடங்கினார். தமிழ் இணைய ஆய்வு மையம் அமைத்தார். 1994ம் ஆண்டு 12 கோடியாக இருந்த மென்பொருள் ஏற்றுமதி 2000ம் ஆண்டில் 1900 கோடி ஆனது. ஒரே இடத்தில் அனைத்துத் தொழில்களும் நடக்கும் சிப்காட் உருவாக்கியவர் தலைவர் கலைஞர். ராணிப்பேட்டை, ஓசூர், திருப்பெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, கும்மிடிப்பூண்டியில் தொழில்வளாகங்கள் அமைத்தார்.

ஹூண்டாய் வந்தது. மிட்சுபிசி வந்தது. போர்டு வந்தது. ‘சென்னை இந்தியாவின் டெட்ராய்ட்’ என்று பைனான்சியல் எக்ஸ்பிரஸ் எழுதியது. இவ்வளவையும் செய்தவர் முதலமைச்சர் கலைஞர். இத்தகைய கலைஞர் அரசு இடைவெளி இல்லாமல் தொடர்ந்து இருந்தால் தமிழகத்தின் இளைய சக்தி இன்னும் தீவிரமாகச் செயல்பட்டு இருக்கும். அதற்கான காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலமாக ஏராளமான இளைஞர்களின் கனவு நிறைவேறட்டும் என்று வாழ்த்துகிறேன்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

* ‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்ச்சி விகிதம் உயர்கிறது என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்திட முயற்சி செய்தவர்களின் கபட எண்ணம் தகர்ந்துள்ளது. இந்த ஆண்டு நீட் ‘கட்-ஆப்’ மதிப்பெண்கள் உயர்ந்துள்ள நிலையில், பெரும்பாலும் கிராமப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கு மட்டுமே எம்.பி.பி.எஸ் அனுமதி கிடைக்கலாம். அரசுப் பள்ளி மாணவர்களில் ‘நீட்’ தேர்வில் 300 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர்கள் 89 பேர்தான். அரசின் பயிற்சி மையங்களில் படித்து, 500க்கு மேல் மதிப்பெண் எடுத்த அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் நால்வர், 495 மற்றும் 497 மதிப்பெண் பெற்ற இரண்டு பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணாக்கர்கள் மற்றும் இரண்டு மாற்றுத் திறனாளி மாணவர்கள் என மொத்தம் 8 பேருக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பு உள்ளது.

அவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 89 பேரில், 82 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குறிப்பாக, அவர்களில் 423 மதிப்பெண் பெற்றவருக்குக் கூட எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும் வாய்ப்பு இல்லை. இனியேனும் ‘நீட்’ தேர்வு முறைக்கு வக்காலத்து வாங்குவதை சப்தமில்லாமல் நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழக மாணவர்களின் - குறிப்பாக நகர்ப்புற, கிராமப்புற ஏழை, எளிய, நடுத்தரப்பிரிவு மாணவ - மாணவியரின் மருத்துவக் கனவு நிறைவேற வேண்டுமானால், மத்திய பா.ஜ. அரசு பிடிவாதமாக நடத்திவரும் ‘நீட்’ ரத்து செய்யப்பட வேண்டும்.

Related Stories: