சென்னை: தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக இடங்களை ஒப்படைப்பதை நிறுத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனியார் பொறியியல் கல்லூரிகள் தாமாக முன்வந்து நிர்வாக இடங்களை அரசிடம் அளிக்க தடை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த ரங்கநாதன் பொறியியல் கல்லூரி சார்பாக கல்லூரியின் தலைவர் தமிழரசி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
அதில்; தமிழகத்தில் சிறுபான்மை அல்லாத தனியார் பொறியியல் கல்லூரிகளில் 65% இடங்களையும் அதேவேளையில் சிறுபான்மை கல்லூரிகளில் 50% இடங்களையும் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக இதுவரை ஒதுக்கி வருவதாகவும், ஆனால் 65% இடங்களுக்கு அதிகமான இடங்களை ஒதுக்கும் படி சில தனியார் கல்லூரிகளுக்கு தொடர்ந்து கட்டாயப்படுத்தப்பட்டு வருவதாகவும், நிர்பந்திப்பதாகவும் கூறி இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்க்கல்வித்துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
அதேபோல அந்த நடைமுறையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களை தனியார் பொறியியல் கல்லூரிகள் எந்த அளவுக்கு ஒதுக்குகிறார்களோ அதைதான் வாங்கி வருவதாகவும் மேற்கொண்டு நிர்பந்திக்கவில்லை என்றும் அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள்; தனியார் கல்லூரிகள் தாமாக முன்வந்து நிவாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் சமர்ப்பிக்க எந்த தடையும் இல்லாததால் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் ஒப்படைப்பதை நிறுத்தும் படி எந்த அனுமதியும் கோர முடியாது என்று உத்தரவிட்டு இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்துள்ளார்.