ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அடையாளம் தெரியாத 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அடையாளம் தெரியாத 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஹக்ரிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் கூட்டாக இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் சந்தேகப்பட்ட பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், இந்திய பாதுகாப்புப் படையை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தி வந்தனர்.

இதனையடுத்து, இந்திய பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். இதில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர்கள் யார் என்று அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தகவலை காஷ்மீர் மண்டல போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் மெல்ஹோரா பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் கூட்டாக இணைந்து நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு அடையாளம் தெரியாத பயங்கரவாதியை சுட்டு கொன்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: