×

7.5% உள் ஒதுக்கீடு மசோதா: விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் பேட்டி..!!

சென்னை: தமிழகத்தில் 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார் என்று சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்த பின்னர் அமைச்சர் ஜெயகுமார் பேட்டியளித்துள்ளார். நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்டம் இயற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்கள் சமூகப் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால், அவர்களைப் பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் ஒப்பிட்டுத் தேர்வில் வகைப்படுத்துவது என்பது சம நீதிக்கு முரணானது என்பதால் மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரை அடிப்படையில் சிறப்புச் சட்டம் இயற்றி ஆளுநர் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதில் சில திருத்தங்கள் கோரி ஆளுநர் அதை திருப்பி அனுப்பினார். பின்னர் அந்தத் திருத்தங்களுடன் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி ஒரு சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, சட்ட மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத்தில் இவ்வழக்கு வந்தபோது ஆளுநரை நிர்பந்திக்க, உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் ஆளுநர் அனுமதி குறித்து அரசுத் தரப்பு காத்திருந்தது. ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில்,  ஆளுநர் காலதாமதம் செய்வதால் அவரை நேரில் சந்தித்து வலியுறுத்த 5 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு இன்று காலை ஆளுநரை அவரது இல்லத்தில் சந்தித்துப் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த சந்திப்பை அடுத்து, 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தந்தால் தான் மருத்துவ கலந்தாய்வு நடத்த முடியும் என்று இந்த சந்திப்பில் தமிழக அரசு சார்பில் கூறியதாக தெரிவித்தார்.

Tags : Jayakumar ,Governor , Internal Allocation Bill, Governor, Minister Jayakumar, Interview
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...