நன்றி குங்குமம்
கோவையைச் சேர்ந்த விவசாயி முத்து முருகன்தான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாக். முப்பது வருடங்களுக்கு மேலாக இயற்கை விவசாயம் செய்துவரும் முத்துவின் வயது 62. அவர் விவசாயம் செய்யும் நான்கு ஏக்கரில் அரை ஏக்கரை மட்டும் தனியாகப் பிரித்தெடுத்து அதில் கம்பையும் சோளத்தையும் பயிரிட்டுள்ளார். இந்த அரை ஏக்கரில் விளையும் கம்பும் சோளமும் அவருக்கில்லை; பறவைகளுக்கு! ஆம்; பறவைகளின் உணவுக்காக பிரத்யேகமாக அரை ஏக்கரில் விவசாயம் செய்கிறார் முத்து.
குருவிகள், கிளிகள் என நூற்றுக்கணக்கான பறவைகள் தினமும் முத்துவின் இடத்துக்கு விசிட் அடிக்கின்றன. அங்கேயே சில பறவைகள் தங்கவும் செய்கின்றன. ‘‘இயற்கையிடமிருந்து அளவுக்கு அதிகமாகவே நாம் எடுத்துவிட்டோம். அதை திருப்பிக்கொடுப்பது நமது கடமை. ஒவ்வொரு விவசாயியும் குறிப்பிட்ட நிலத்தை ஒதுக்கி பறவைகளின் உணவுக்காக பயிர் செய்ய வேண்டும்...’’ என்கிறார் முத்து முருகன்.
தொகுப்பு: த.சக்திவேல்