ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் 269 தனியார் பஸ்கள் இயங்கின

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 269 தனியார் பஸ்கள் இன்று காலை முதல் இயங்க தொடங்கியது.  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த மாதம் 1ம் தேதி முதல் மீண்டும் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. முதலில் மாவட்டத்திற்குள் மற்றும் போக்குவரத்து நடைபெற்று வந்தது. பின்னர் கடந்த 7ம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக 11 பணிமனைகளில் உள்ள 800 பஸ்களில் தற்போது 400க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததையடுத்து தனியார் பஸ்கள் ஈரோடு மாவட்டத்தில் இயக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பஸ்கள் இன்று காலை முதல் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் பழனிசாமி கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனியார் பஸ்கள் கடந்த 7 மாதங்களாக இயக்கப்படவில்லை.

தற்போது அரசின் வழிகாட்டுதலுடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 269 தனியார் பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 50 பஸ்கள் ஈரோடு மாவட்டத்திலும், மீதமுள்ள பஸ்கள் வெளி மாவட்டங்களுக்கும் இயக்கப்பட்டு வருகிறது,’’ என்றார்.

Related Stories: