போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்று 3 பேர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் கார்கோனே மாவட்டத்தில் மருகார் கிராமத்தை சேர்ந்தவர் சிறுமி. அவர் வயல்வெளியில் ஒதுக்குப்புறமாக உள்ள குடிசை வீட்டில் தனது சகோதரனுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் குடிசைக்குள் இருந்த சிறுமியை தூக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த சிறுமி கண் விழித்து விட்டதால் அவர் வர மறுத்துள்ளார்.
இதையடுத்து உடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனும் எழுந்து அந்த நபர்களை தடுத்துள்ளான். ஆனால் அவர்கள் மூவரும் சேர்ந்து சிறுவனை தாக்கிவிட்டு சிறுமியை இழுத்து சென்று பலாத்காரம் செய்துள்ளனர் . இதனிடையே அந்த சிறுவன் ஓடிச் சென்று கிராமமக்களை அழைத்தான். இதையடுத்து மூவரும் இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குற்றவாளிகள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.