×

தமிழகத்தின் 32 மாவட்டங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலானது : எந்த ரேஷன் கடைகளிலும் கை ரேகையை பதிவு செய்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்!!

சென்னை: தமிழகத்தில் 32 மாவட்டங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை,  தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் நாட்டின் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டன.  இந்த திட்டத்தின்படி ஸ்மார்ட் கார்டு வைத்துள்ள யாரும் தமிழகத்தில் எந்த நியாய விலை கடைகளிலும் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.

இதற்காக,  அனைத்து ரேஷன் கடைகளிலும் பாயிண்ட் ஆப் சேல் இயந்திரத்துக்கு மாற்றாக பயோ மெட்ரிக் எனப்படும் விரல் ரேகை பதிவு இயந்திரம் வைக்கப்படுகிறது. இந்த நடைமுறையின் மூலம் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பொருட்களை பெற முடியும். அதே நேரத்தில் அந்த ஸ்மார்ட் கார்டை மற்றவர்கள் கொண்டு வந்தால் பொருட்களை பெற முடியாது. இந்த பயோ மெட்ரிக் கருவிகள் மாநிலம் முழுவதும் 35,233 ரேஷன் கடைகளிலும் வைக்கும் பணி நடந்து வருகிறது.  மேலும், இந்த பயோ மெட்ரிக் கருவி பயன்பாடு குறித்து விற்பனையாளர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டன. இதை தொடர்ந்து, இன்று முதல் விரல் ரேகையை பதிவு செய்து, பொருட்களை வாங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.

இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்துள்ளார். அதன்படி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை, வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, நாகை, தென்காசி, தேனி, நீலகிரி, கரூர், திருப்பூர், வேலூர், தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர், நாமக்கல், திருவாரூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, கோவை, சிவகங்கை, கடலூர், திண்டுக்கல் ஆகிய 32 மாவட்டங்களில் இந்த திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வருகிறது.அதேநேரத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், விருதுநகர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் அக்.16ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

Tags : country ,districts ,Tamil Nadu ,ration shop , Tamil Nadu, one country only ration scheme, hand line
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 2...