உ.பி.யில் பாலியல் பலாத்காரத்தால் கொடூரமாக பலியான இளம்பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம், அரசு வேலை, ஒரு வீடு வழங்கப்படும் : முதல்வர் யோகி ஆதித்யநாத்!

புதுடெல்லி: உ.பியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 19 வயது இளம்பெண், கடந்த 14ம் தேதி தனது தாயுடன் சென்ற போது, உயர் வகுப்பை சேர்ந்த 4 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பிறகு உடலில் பலத்த காயங்களுடன், நாக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் கந்தல் கோலத்தில் கண்டெடுக்கப்பட்டார். அந்த பெண் அலிகாரில் உள்ள ஜேஎன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்பு, முதுகெலும்பு மிகவும் பாதிக்கப்பட்டதால் 28ம் தேதி டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இளம்பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இப்பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சித்தலைவர்கள், பெண்கள் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கிராமமே எதிர்ப்பு தெரிவித்தும், உத்தர பிரதேச மாநில போலீசார் இளம் பெண்ணின் குடும்பத்தினரின் சம்மதத்தையும் பெறாமல், அவர்களிடம் சடலத்தை ஒப்படைக்காமல் அதிகாலை 2.30 மணிக்கு எரித்து விட்டனர். போலீசாரின் இச்செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர் இடையே இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

* ரூ.25 லட்சம் நிதியுதவி அரசு வேலை, ஒரு வீடு

`இறந்த இளம்பெண்ணின் தந்தையிடம் காணொலி மூலம் தொடர்பு கொண்டு முதல்வர் யோகி நேற்று பேசினார். அப்போது, அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியதுடன் ரூ.25 லட்சம் நிதியுதவி, வீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என யோகி தெரிவித்தார்.

Related Stories: