தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை தொடும் வகையில் மக்கள் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும்

சென்னை: தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கினை எய்திடமக்கள் அனைவரும் ரத்த தானம் செய்திட ஆர்வத்துடன் முன்வர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்ட அறிக்கை: விலைமதிப்பற்ற மனித உயிர்களை காப்பாற்றும் இரத்த தானத்தின் அவசியம் குறித்தும், இரத்த தானம் செய்வது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே எற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தேசிய தன்னார்வ ரத்த தான நாளின் கருப்பொருள் “தன்னார்வ ரத்த தானம் செய்து, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு பங்களிப்போம்”என்பதாகும்.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் இணைந்து, தமிழ்நாட்டில் தன்னார்வ ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றும் தன்னார்வ ரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கும், அரசு ரத்த வங்கி ஊழியர்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் கலெக்டர்கள் பாராட்டு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கவுரவித்து வருகிறார்கள். கோவிட் - 19 காலக்கட்டங்களில் தொடர் தன்னார்வரத்த கொடையாளர்கள், செஞ்சுருள் சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கோவிட் - 19 தன்னார்வலர்களிடமிருந்து 1,77,500 அலகுகள் ரத்தம் சேகரிக்கப்பட்டு, 1,74,000 அலகுகள் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

தன்னார்வ ரத்த கொடையாளர்கள் மூலம் ரத்தத்தை சேகரிப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. நடப்பாண்டில் தன்னார்வரத்த தானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கினை எய்திட மக்கள் அனைவரும் இரத்த தானம் செய்திட ஆர்வத்துடன் முன்வர வேண்டும். இவ்வாறு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: