சென்னை: காவல் துறையில் காலியாக உள்ள 969 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஜனவரி மாதம் 12,13 ஆகிய தேதிகளில் 969 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த எழுத்துத் தேர்வை ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் எழுதினர். அதில் 5,500 பேர் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றனர். அதைதொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று முதல் வரும் 12ம் தேதி வரை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த உடற்தகுதி தேர்வுக்கு நாள் ஒன்றுக்கு 600 பேர் வீதம் அழைக்கப்படுகின்றனர். அவர்களுக்கான அழைப்பாணைகளும் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.