வேளாண் சட்டத்துக்கு எதிராக திமுக சார்பில் வழக்கு தாக்கல்: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: வேளாண் சட்டத்துக்கு எதிராக திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடரின் போது மூன்று வேளாண் திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை தடையின்றி எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்வதற்கு வழி வகுக்கும் என, மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் விவசாயிகளுக்கு எதிரான இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் சட்ட விதிமுறைகளை மீறி நிறைவேற்றப்பட்டுள்ளதால் இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கக்கூடாது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. மேலும் விவசாயிகள் தரப்பிலும் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருக்கின்றனர்.

இதில் குறிப்பாக மசோதாக்களை எதிர்த்து பா.ஜ தலைமையிலான கூட்டணியில் இருந்து பஞ்சாப்பின் சிரோன்மணி அகாலி தளம் கட்சி விலகியது. இந்த சூழலில் தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் திருத்த மசோதாக்களுக்கும் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து மேற்கண்ட மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டு தற்போது அமலுக்கு வந்துள்ளது.

இதில் தமிழகத்தில்  திமுக,  டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.     இந்த நிலையில் திமுக கட்சி மற்றும் அதன் நாடாளுமன்ற எம்பி திருச்சி சிவா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் மற்றும் வழக்கறிஞர் குமணன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு புதிய ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அதில்,” நாடாளுமன்றத்தில் சட்டமாக கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் மசோதாக்கள் அனைத்தும் விவசாயிகள் மற்றும் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானதாகும். இதில் விவசாயிகளுக்கான அதிகாரம் மற்றும் பாதுகாப்பு என்பது முற்றிலும் பறிக்கப்படுகிறது. குறிப்பாக விவசாய விரோதச் சட்டங்களான விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் அதிகாரம் மற்றும் பாதுகாப்புச் 2020 சட்டம், விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம்- 2020, அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, ஆகியவை முழுமையாக விவசாயிகளுக்கு எதிராக உள்ளது என்பதால் அதனை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து அடுத்த ஓரிரு நாளில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: