அரியர் மாணவர்கள் தேர்ச்சி யுஜிசி விதிகளுக்கு முரணானது: ஐகோர்ட்டில் ஏஐசிடிஇ பதில் மனு

சென்னை: அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்பு பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) விதிகளுக்கு முரணானது என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கலை அறிவியல், பொறியியல், எம்சிஏ படிப்புகளுக்கான அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்ய கோரி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ராம்குமார் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளுக்கு பதிலளித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம், பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், தேர்வு நடத்தி மாணவர்களை மதிப்பீடு செய்யாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் அரசாணை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழும விதிகளுக்கு முரணானது. கொரோனா பேரிடர் காலத்தில் இறுதியாண்டு மாணவர்கள் தவிர, பிற மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது சிக்கலானது என்பதால், அடுத்த கல்வியாண்டுக்கு மாணவர்களை முன்னேற்றி, அவர்கள் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள செய்வதற்கு ஏதுவாக பல்கலைக்கழக மானிய குழு சுற்றறிக்கை வெளியிட்டது. இறுதி பருவ தேர்வு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்.

அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மட்டுமே பட்டம் வழங்கப்படும். மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை. அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு விதிகளுக்கு புறம்பானது. இறுதியாண்டு மாணவர்களின் அரியர் பாடங்களுக்கு தேர்வு நடத்தப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு விதிமுறைகள் அறிவித்துள்ளது. அதை பின்பற்றும்படி அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுக்கும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் விரைவில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளன.

Related Stories: