பொய்யர், கோமாளி - பிடென் பெரிய புத்திசாலியா? - டிரம்ப்: அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் நேரடி விவாதம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் அதிபர் டிரம்ப்பும், ஜோ பிடெனும் நேற்று முன்தினம் முதல் முறையாக நேருக்கு நேர் கடுமையாக வாதிட்டனர். அமெரிக்காவில் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடெனும், குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் 2வது முறையாகவும் போட்டியிடுகின்றனர். இருவரும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், தனிநபர் தாக்குதல் அதிகளவில் நடக்கிறது. இந்நிலையில், ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளிவ்லேண்டில் இருவரும் பங்கேற்ற நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சி நேற்று முன்தினம் முதல்முறையாக நடைபெற்றது.

இதில் முதலில் பேசிய டிரம்ப், ‘‘நீங்கள் (பிடென்) மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால், அமெரிக்காவில் கொரோனாவுக்கு 20 லட்சம் பேர்  இறந்திருப்பார்கள். இந்த வைரசை பரப்பிய சீனாவின் மீது தடை விதிப்பதை நீங்கள் விரும்பவில்லை,’’ என்றார். இதற்கு பதிலளித்து பிடென் பேசுகையில், ‘‘இதுவரை அவர் (டிரம்ப்) கூறிய அனைத்துமே பொய். அவர் ஒரு பொய்யர். கொரோனா தொற்றுக்கு எதிரான திட்டம் எதுவுமே அவரிடம் இல்லை. இவர் ஒரு கோமாளி, முட்டாள்,’’ என்றார்.

இதற்கு பதிலடி கொடுத்த டிரம்ப், ‘‘உங்களை போன்ற புத்திசாலியை பார்க்க முடியாது. 47 ஆண்டுகளாக நீங்கள் எதையும் செய்யவில்லை. நீங்கள்தான் பெரிய பொய்யர்.” என்றார். இவ்வாறு இருவரும் தனிப்பட்ட முறையில் கடுமையாக தாக்கிக் கொண்டதால், விவாதத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: