புதுடெல்லி: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுக்கு நேற்று முன்தினம் செய்யப்பட்ட வழக்கமான மருத்துவ பரிசோதனையின்போது, கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதன் முடிவு நேற்று முன்தினம் இரவு கிடைத்தது. அதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி, வீட்டிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இத்தகவல் அறிந்ததும் மாலத்தீவு துணை அதிபர் பைசல் நசீம், வெங்கையா நாயுடு விரைவில் குணமடைய டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். இதற்காக, வெங்கையா அவருக்கு நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக வெங்கையா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘நான் நலமுடன் இருக்கிறேன். கவலைப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை. மருத்துவர்களின் ஆலோசனைப்படி கொரோனாவுக்கு எதிரான அவசியமான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். உங்களுடைய இதயப்பூர்வமான உண்மையான வாழ்த்துக்கு நன்றி,’ என்று கூறியுள்ளார்.