செய்யூர்: செய்யூர் அடுத்த பவுஞ்சூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறையினர் சார்பில் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து மாத விழா நேற்று நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் கங்காதரன் தலைமை தாங்கினார். பகுதி சுகாதார செவிலியர் சுனதா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அணைக்கட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் வாசுதேவன் கலந்து கொண்டார். இதில் பவுஞ்சூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.
இதில், கர்ப்பிணிகள் பிரசவ காலங்களில் என்னென்ன உணவு, காய்கறிகள் உட்கொள்ள வேண்டும், மருத்துவர்களால் வழங்கப்படும் மருந்து, மாத்திரைகளை எடுத்து கொள்ளும் முறைகள், அரசு மருத்துவமனைகளால் கிடைக்கும் சலுகைகளை பெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, கர்ப்பிணிகளுக்கு காய்கறிகள், சத்துணவு, சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. மருத்துவர்கள் அருள்மொழி, லாவண்யா, ரேவதி, ரவிந்தர், மேற்பார்வையாளர்கள் சித்ரா, சக்திராணி, சுகாதார ஆய்வாளர்கள் கமல்ராஜ், யஷ்வந்த்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.