×

5-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு: அக்.15 முதல் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி

டெல்லி: கொரோனா ஊரடங்கு 5-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும் நோக்கத்துடன் மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து சில மாதங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், தளர்வுகளும் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று (செப். 30) நான்காவது கட்ட தளர்வு முடிய உள்ளதால், அக். 1ம் தேதி முதல் ஐந்தாம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வரவுள்ளன. அதனால், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அக்.31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற பகுதிகளில் கீழ்காணும் தளர்வுகளை அறிவித்துள்ளது;

* கொரோனா கட்டுப்படுத்துதல் பகுதிகளுக்கு வெளியே எந்தவிதமான கட்டுப்பாடுகளையும், மத்திய அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் மாநில அரசுகள் பிறப்பிக்க கூடாது.

* பள்ளிகள், பயிற்சி மையங்கள் திறப்பது குறித்து அக் 15ம் தேதிக்கு பிறகு மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்( மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களின் ஒப்புதல் பெறவேண்டும்)

* அக்.15 முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி( இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிடும்)

* அக். 15ம் தேதி முதல் திரையரங்குகள், விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கான நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி

* விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் பங்கேற்பது குறித்து மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம்

* அக். 15ம் தேதி முதல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வர்த்தக கண்காட்சிகள் நடத்த அனுமதி

* சமூக, அரசியல், மத நிகழ்வுகளில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க அனுமதி

* மாநில, மாவட்டங்களுக்குள் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க கூடாது.

* முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.


Tags : government ,Theaters , Central government announces phase 5 curfew relaxation: Theaters allowed to operate with 50 per cent seats from Oct. 15
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...