‘மகளிர் மட்டும்’ பட பாணியில் உல்லாசத்துக்கு அழைத்த மேலாளரை கட்டி போட்டு உதைத்த பெண்கள்

பொங்கலூர்,:பல்லடம் அருகே உல்லாசத்துக்கு அழைத்த பனியன் கம்பெனி மேலாளரை, பெண்கள் கட்டிப்போட்டு உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருபவர் சிவக்குமார் (43). திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள சூளை பகுதியை சேர்ந்தவர். இவர், அங்கு பணியாற்றி வரும் பெண்களிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. ஒரு பெண்ணின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து, அவரது வாட்ஸ்-அப்பிற்கு அனுப்பி, ‘என்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும். இல்லையெனில், ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்’ என மிரட்டியதாக கூறியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணும், அவரது தோழியும் பல்லடம் அடுத்த அருள்புரம் பகுதியில் உள்ள பாச்சாங்காட்டுப்பாளையம் குட்டைக்கு கடந்த 14ம் தேதி சிவக்குமாரை வரவழைத்தனர். பின்னர் மிளகாய் பொடியை தூவி சரமாரியாக தாக்கினர். கீழே விழுந்த சிவக்குமாரை கட்டிப்போட்டு உதைத்தனர். பின்னர் பல்லடம் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், மதுரையை சேர்ந்த அந்த பெண்களுக்கு சிவக்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். வேலையை விட்டும் நீக்கியுள்ளார். இதனால் ஆத்திரத்தில் சிவக்குமாரை தாக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து சிவக்குமாரை கைது செய்தனர். இதேபோல், சிவக்குமார் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்து 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் ஒரு பெண்ணுக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்நிலையில், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இரு பெண்களும் மனு அளித்தனர். அதில், ‘தங்களை உல்லாசத்துக்கு அழைத்த மேலாளர் சிவக்குமாரை தாக்கியதால் எங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் கூறியிருந்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.உல்லாசத்துக்கு அழைத்த பனியன் கம்பெனி மேலாளரை ‘மகளிர் மட்டும்’ பட பாணியில் கட்டிப்போட்டு பெண்கள் உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: