மத்திய, மாநில அரசுகளின் நிதிப்பற்றாக்குறை 13.4% ஆக இருக்கும்

புதுடெல்லி:  ஊரடங்கால் வரி வசூல் குறைந்ததைக் காரணம் காட்டி, ஜிஎஸ்டி இழப்பீடு நிதியைக் கூட மத்திய அரசு வழங்காமல் கைவிரித்து விட்டது. பட்ஜெட் மதிப்பீடு அளவுக்கு வருவாய் வராததால், நிதிப்பற்றாக்குறை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.  இதுகுறித்து கேர் ரேட்டிங்ஸ் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை 17.8 லட்சம் கோடியாக இருக்கும் என தெரித்துள்ளது. பட்ஜெட் மதிப்பீட்டின்படி இது ₹8 லட்சம் கோடியாக இருந்தது. இதுபோல், மாநிலங்களின் நிதிப்பற்றாக்குறை 7.73 லட்சம் கோடியாக இருக்கும். இது ஏற்கெனவே இருந்த பட்ஜெட் மதிப்பீடான 6.35 லட்சம் கோடியை விட அதிகம். அதாவது, மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை, ெமாத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 9 சதவீதமாக இருக்கும். பட்ஜெட்டில் இது, 3.5 சதவீதம் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

 மாநிலங்களின் பற்றாக்கறை நடப்பு நிதியாண்டில் 3.9 சதவீதமாக இருக்கும். பட்ஜெட்டில் இது 2.8 சதவீதம் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஜிஎஸ்ட வசூல் குறைந்ததை காரணம் காட்டி இழப்பீட்டை வழங்க மறுத்துள்ள மத்திய அரசு, மாநிலங்கள் கடன் வாங்கிக்கொள்ள அறிவுறுத்தியுள்ளதால், மாநிலங்கள் கூடுதலாக 97,000 கோடி திரட்ட வேண்டியுள்ளது. இதையும் சேர்த்தால், மாநிலங்களின் நிதிப்பற்றாக்குறை 4.4 சதவீதமாக அதிகரிக்கும்.  இதன்படி, ஒட்டு மொத்த அளவில் மத்திய, மாநில அரசுகளின் நிதிப்பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் 13.4 சதவீதமாக இருக்கும். இந்தப் பற்றாக்குறையை 6.4 சதவீதமாக வைத்திருக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், இதை விட பற்றாக்குறை இரட்டிப்பாக இருக்கும் நிலை உருவாகியுள்ளது என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

*  மத்திய அரசு ஜிஎஸ்டி இழப்பீடு தராததால், மாநிலங்களின் நிதிப்பற்றாக்குறை 4.4 சதவீதமாக உயர வாய்ப்பு.

* 16 மாநில அரசுகளின் தணிக்கைக்கு முந்தைய நிதிநிலை அறிக்கையின்படி, கடந்த ஏப்ரல்  ஜூன் காலக்கட்டத்தில் வரி வசூல் 20 சதவீதம் சரிந்துள்ளது.

* கடந்த ஜூலை வரை, மேற்கண்ட மாநிலங்களின் நிதிப்பற்றாக்குறை 116 சதவீதம் உயர்ந்திருந்தது. நடப்பு நிதியாண்டில் மாநில அரசுகளின் நிதிப்பற்றாக்குறை அதிகபட்சமாக 4.4 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பற்றாக்குறை மேலும் உயரும்

மத்திய அரசின் வரி வசூல் நடப்புநிதியாண்டில் 16.4 லட்சம் கோடியாக இருக்கும் என, பட்ஜெட்டில் மதிப்பீடு செய்யப்பட்டது. இதில், கொரோனா பரவலால் 3.9 லட்சம் கோடி குறையும் எனவும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டுவதும் இலக்கை விட குறைவாக இருக்கும். அதாவது, பட்ஜெட் மதிப்பீட்டை விட 1.2 லட்சம் கோடி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த பற்றாக்குறை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ரேட்டிங் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: