நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்ட 25% எல்ஐசி பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு

புதுடெல்லி: எல்ஐசி நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறையை 3.5 சதவீதமாக வைத்திருக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், கொரோனாவால் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்ட நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்ட, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, எல்ஐசியில் (இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்) உள்ள 25 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் மேலும் கூறுகையில், நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவன சொத்து, பங்குகள் விற்பனை மூலம் 2.1 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது.

ஆனால், கடந்த ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து 5,700 கோடி மட்டுமே திரட்டப்பட்டுள்ளது. தற்போது எல்ஐசி நிறுவன பங்குகளை விற்க வசதியாக, சட்ட திருத்தங்களை செய்யவும், இதற்காக நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறவும் திட்டமிட்டுள்ளது என்றனர். நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்ட, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவன பங்குகளை மத்திய அரசு விற்க முடிவு செய்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: