கொழும்பு: இறைச்சிக்கு மாடுகளை வெட்ட தடை விதிக்கும் பரிந்துரைக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கையில் விவசாய தேவைக்காக கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டு, இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை விதிக்க வேண்டுமென பிரதமர் மகிந்தா ராஜபக்சே பரிந்துரை செய்தார். இதை, ஆளும் இலங்கை பொதுஜன பெராமுனா (எஸ்எல்பிபி) கட்சியின் நாடாளுமன்ற குழு கடந்த 8ம் தேதி ஏற்றது. இதைத் தொடர்ந்து, மாடுகளை வெட்ட தடை விதிக்கும் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தொடர்ந்து, விலங்குகள் சட்டத்தில் திருத்தம், கால்நடை வெட்ட தடை விதிக்கும் அவசர சட்டம் மற்றும் பிற சட்டங்களில் திருத்தங்கள் செய்வதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு உள்ளது. அதே நேரம், மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களுக்காக அவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இலங்கையில் மொத்தம் உள்ள 2 கோடி மக்கள் தொகையில் 70.10 சதவீதம் புத்த மதத்தினரும், 12.58% இந்துக்களும், 9.66% முஸ்லிம்களும், 7.62% கிறிஸ்தவர்களும், 0.03% பிற பிரிவினரும் உள்ளனர்.