மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 150 ஆண்டுகள் பழமையான கோயிலை காணவில்லை என்று ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக சென்று கோட்டாட்சியரிடம் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் ஸ்ரீரங்காபுரத்தில் சின்ன மலை மகாலிங்கம் கோவில் ஒன்று அமைந்திருந்தது. இந்த கோயிலை 13 கிராம மக்கள் ஒன்றுகூடி வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் இந்தாண்டு திருவிழா நடத்த கோவிலுக்கு சென்ற பொதுமக்களை தனியார் விவசாய கல்லூரி நிர்வாகத்தினர் உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்ததில் பழமையான கோயிலை கல்லூரி நிர்வாகம் உடைத்து தரைமட்டமாக்கியதாக கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதாவது கொரோனா மற்றும் ஊரடங்கு காலத்தில் மக்கள் கோவிலுக்கு சொல்லாததை கருத்தில் கொண்டு கோயிலை கல்லூரி நிர்வாகம் இடித்து விட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் கல்லூரி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஊர்வலமாக சென்று கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.