உலக கொரோனா உயிரிழப்பு 10 லட்சத்தை தாண்டியது!...ஐ.நா.பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரெஸ் கவலை!!!

நியூயார்க்:  கொரோனா உயிரிழப்பு 10 லட்சதத்தை தாண்டி இருப்பது குறித்து ஐ.நா.பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரெஸ் கவலை தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றால் தற்போது உலக நாடுகள் அனைத்தும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உயிரிழப்புகளும் 10 லட்சத்தை தாண்டியுள்ளது. இவை மிகுந்த வேதனையளிப்பதாக ஐ.நா பொதுச்செயலாளர் குட்ரெஸ் தெரிவித்துள்ளார். உலகில் தற்போது மட்டும் 76 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 48 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

 அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளில் மட்டும் இறப்பு விகிதம் 45 சதவீதமாக இருப்பதாக கொரோனா பாதிப்புகள் தொடர்பான ராய்டர்ஸ் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 16 வினாடிக்கு ஒருவரும், ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 5 ஆயிரத்து 400க்கும் அதிகமானோரும் கொரோனாவுக்கு பலியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் 10 லட்சம் மரணம் என்ற வேதனையான கட்டத்தை உலகம் எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தோர் அனைவரும் தமது தாய், தந்தை, மனைவி, சகோதரர், சகோதரி, நண்பர்கள், உறவினர்கள் என அனைவரையும் இழந்தது வேதனையளிப்பதாக ஆன்டனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். 10 லட்சம் இறப்பு என்ற எண்ணிக்கை எளிதில் மறக்க முடியாது என்றும், ஆனால் யாரும் நம்பிக்கையை இழக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

Related Stories: