கொள்ளிடம்: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பெரம்பூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 500 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு உரிய மயான கொட்டகை 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. கடந்த ஒரு வருட காலமாக இந்த மயானம் கொட்டகை கட்டிடம் சிதிலமடைந்து காரைகள் பெயர்ந்து விழுந்து எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இறந்தவரின் சடலத்தை எரிப்பதற்கும், அடக்கம் செய்வதற்கும் இறுதி சடங்கில் கலந்து கொண்டு மயானத்திற்கு செல்லும் அத்தனை பெரும் அச்சத்துடனேயே செல்கின்றனர். இந்த மயான கொட்டகை கட்டிடம் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது . மழைக்காலத்தில் நிச்சயமாக இந்த மயான கொட்டகை இடிந்து விழும் அபாய நிலை உள்ளது. எனவே உயிர் இழப்பை தவிர்க்கும் வகையில் உடனடியாக இடிந்து விழும் நிலையில் உள்ள மயான கொட்டகை அகற்றிவிட்டு புதிய மயான கொட்டகை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.