×

உத்தரகாண்டில் நமாமி கங்கை திட்டத்தின் கீழ் 6 மெகாத் திட்டங்கள், கங்கை குறித்த முதலாவது அருங்காட்சியகம் : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!!


டெல்லி : உத்தரகாண்டில் கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ், ஆறு மெகாத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி, இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார். ஒரு நாளைக்கு 26 மில்லியன் லிட்டர்கள் (MLD) கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடம் கட்டுவது, ஹரித்துவார் ஜெக்தீப்பூரில் உள்ள ஒரு நாளைக்கு 27 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடத்தை மேம்படுத்துதல், சாரை என்னுமிடத்தில் 18 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடக் கட்டுமானம் உள்ளிட்டவை இத்திட்டங்களில் அடங்கும்.

பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ள 68 எம்எல்டி ஜெக்தீப்பூர் திட்டம், பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது கழிவுநீர்த் திட்டமாக அமைந்துள்ளது. ரிஷிகேசில், லக்காத்கட்டில் ஒரு நாளைக்கு 26 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடம் தொடங்கப்பட உள்ளது. ஹரித்துவார் – ரிஷிகேஷ் மண்டலத்தில் 80 சதவீதக் கழிவு நீர் கங்கை நதியில் விடப்படுகிறது. எனவே, இந்த கழிவுநீர் சுத்திகரிப்புக் கூடங்கள் தொடங்கப்படுவது, கங்கை நதியைத் தூய்மையாக வைத்திருப்பதில் முக்கியமான பங்காற்றும் என அரசு தெரிவித்துள்ளது.

முனி கி ரெட்டி நகர் , சந்திரகேஷ்வர் நகரில் அமையவுள்ள ஒரு நாளைக்கு 7.5 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடம் , நாட்டின் முதலாவது நான்கு அடுக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமாகும். சொர்பானியில் ஒரு நாளைக்கு 5 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடம், பத்ரிநாத்தில் 1 மில்லியன் லிட்டர்கள், 0.01 மில்லியன் லிட்டர்கள் திறன் கொண்ட கழிவுநீரை சுத்திகரிக்கும் இரு கூடங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

கங்கை அவலோகன்

 கலாச்சாரம், பல்லுயிர்ப் பெருக்கம், கங்கை நதியில் மேற்கொள்ளப்பட்ட புத்தாக்க நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ‘கங்கை அவலோகன்’ என்னும் கங்கை குறித்த முதலாவது அருங்காட்சியகத்தையும் பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். இந்த அருங்காட்சியகம் ஹரித்துவாரில் உள்ள காந்திகாட் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம் மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ள கங்கையில் பயணம் என்னும் நூலும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இந்த வண்ணமயமான நூல் கங்கை நதியின் பல்லுயிர்ப் பெருக்கத்தையும், கலாச்சாரத்தையும் இணைக்கும் ஒரு முயற்சியாகும். கங்கை நதியின் பிறப்பிடமான கவ்முக்கிலிருந்து, அது கடலில் கலப்பதற்கு முந்தைய இடமான கங்கா சாகர் வரை பயணப்படும் கங்கையின் கதையைக் கருத்தியலாக இது கொண்டுள்ளது.ஜல்ஜீவன் இயக்கம் மற்றும் ‘ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் பானி சமிதிகளுக்கான மார்கதர்ஷிகா’ ஆகியவற்றின் முத்திரைகளும் பிரதமரால் வெளியிடப்பட்டன.


Tags : Uttarakhand ,Modi ,Naomi Ganga ,Ganges , Uttarakhand, Naomi Ganga, Meghat Projects, Ganga, Museum, Prime Minister Modi
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்