அண்ணன் காதலுக்கு உடந்தையாக இருந்த போலீஸ்காரர் சரமாரியாக வெட்டி படுகொலை: செங்கல்பட்டில் பரபரப்பு

சென்னை: செங்கல்பட்டு அடுத்த பாலூர் பழையசீவரம் பெரியக்காலனி பகுதியைச் சேர்ந்தவர் இன்பரசு(29). இவர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு ஆயுதப்படை போலீசாக சேர்ந்து சென்னை புழல் சிறையில் பணியாற்றிவருகிறார்.

இந்நிலையில், நேற்று அவருடைய நண்பர்கள் போன் செய்து அருகிலுள்ள வயல் வெளிக்கு அவரை வரச்சொல்லியுள்ளனர். இதனையடுத்து, தனது டூவீலரில் இன்பரசு அங்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.    இந்நிலையில், பழையசீவரம் காட்டுபகுதியில் ஆடுமேய்த்துக்கொண்டிருந்த சிலர் ரத்தவெள்ளத்தில் கிடந்த சடலத்தைப் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் மற்றும் பாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கொலை செய்யப்பட்டது சிறைத்துறையில் பணியாற்றும் போலீஸ் இன்பரசு என்பது தெரிய வந்தது. பின்பு அவரது சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக  அனுப்பிவைத்தனர்.

இது சம்பந்தமாக பாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக இன்பரசு கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பழையசீவரம் முன்னாள் ஊராட்சிமன்றத்தலைவர் பெருமாள் என்பவரின் மகளும், அதை பகுதியைச்சேர்ந்த இன்பரசுவின் அண்ணன் அன்பரசும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலை ஊராட்சி மன்றத்தலைவர் பெருமாள் மற்றும் அவரது மகன் ராஜன் என்கிற வரதராஜன் ஆகியோர் ஏற்கவில்லை. தனது அக்காவை விட்டு விடும்படி பலமுறை வரதராஜன் கூறியும் அன்பரசு கேட்கவில்லை. இது சம்பந்தமாக இரு தரப்பு இடையே பலமுறை சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த பகுதியில் நடந்த ஒருவரின் இறுதிசடங்கில் பங்கேற்ற அன்பரசன் மற்றும் அவரது அண்ணன் சிலம்பரசன் ஆகியோரை வரதராஜன் தாக்கியுள்ளார். இதைக்கேள்விப்பட்ட இன்பரசன் வரதராஜனிடம் தகராறு செய்துள்ளார். இதனால் இரு தரப்பிற்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதை காரணமாக வைத்தும், தனது அக்காவுடனான காதலை அன்பரசு தொடர்வதாலும், அதற்கு உடந்தையாக உள்ள இன்பரசை வரதராஜன்  கூலிப்படையை ஏவி, கொலை செய்ததும் தெரியவந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செங்கல்பட்டில் அதிமுக பிரமுகர் சேகர் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், போலீஸ்காரர் படுகொலை செய்யபட்ட சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: