மீஞ்சூர் பேரூராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: விலை கொடுத்தும் வாங்கும் அவலம்

பொன்னேரி: மீஞ்சூர் பேரூராட்சியில் அடங்கிய அரியன்வாயல் கிராமத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனர் ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் மேலும், பலரும் தினக்கூலியாக வேலை செய்து வருகின்றனர். இந் பகுதி மக்கள் கடந்த சில வருடங்களாக குடிநீரை விலை கொடுத்தே வாங்கி வரும் சூழ்நிலையில் உள்ளனர். மேலும், மீஞ்சூர் பேரூராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீரும் உப்பு நீராய் மாறி எதற்கும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. முன்பு பேரூராட்சியின் தண்ணீரை துணி துவைத்தல், பாத்திரம் கழுவுதல், குளித்தல் உள்ளிட்ட தேவைகளுக்காக பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் தற்போது அனைத்திற்கும் விலை கொடுத்து வாங்குவதாக கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் டிராக்டர்கள் கொண்டு விநியோகிக்கப்படும் நீரை குடம் ரூ.5 முதல் ரூ.10 வரை விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. மேலும், சில நேரங்களில் டிராக்டர் வரவில்லையென்றால் கேன் தணணீர் ரூ.30 வரை செலவு செய்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதன்படி மாதந்தோறும் தண்ணீருக்காக ரூ.1000 வரை செலவு செய்வதால் மிகுந்த சிரமம் ஏற்படுவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

இன்னும் இப்பகுதி நிலத்தடிநீர் மட்டமும் குறைந்து நீரின் சுவையும் உவர்ப்பானதாக தன்மை உள்ளதாக மாறியிருப்பதால் அதனை பயன்படுத்த முடியாத நிலைக்கு இப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இப்பகுதியில் மக்களின் அவசியத்தேவையான குடிநீரை முறையாக வழங்க பேரூராட்சி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நிலத்தடிநீரை மேம்படுத்தும் திட்டங்களான மழைநீர் சேகரிப்பு, வரத்து கால்வாய்களையும் குளங்களையும் தூர்வாரி நீரை சேமித்து வைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் இப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் மாவட்ட ஆட்சியருக்கும். பேரூராட்சி நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: