வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த கண்காணிப்பு குழு கூட்டத்தை ஆண்டுக்கு 2 முறை நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மாநில அளவிலான உயர்நிலை கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தப்பட வேண்டுமென்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ், மாநில அளவில் ஆண்டுக்கு இரு முறையும் மாவட்ட அளவில் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும் கண்காணிப்பு குழுவை கூட்ட வேண்டும். இந்த கூட்டத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு அளிப்பது தொடர்பாகவும் கலந்தாலோசித்து மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் மார்ச் 31ம் தேதிக்குள் அதுதொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆனால், தமிழகத்தில் அதுபோன்ற கண்காணிப்புக் குழு கூட்டங்கள் சில ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. எனவே, கண்காணிப்பு குழு கூட்டத்தை நடத்துமாறு உத்தரவிட வேண்டும் எனக்கோரி கோவையை சேர்ந்த வக்கீல்  பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர் டியம் டேய் சார்பில் பதில் மனு தாக்கல் செய்தார்.  அதில், வன்கொடுமை தடுப்பு சட்டப்படி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்  சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய மாநில அளவிலான உயர்நிலை கண்காணிப்பு குழு கடந்த 8ம்  தேதி கூட்டம் நடத்தப்பட்டது.

நிர்வாக காரணங்களால் உயர்நிலை  கண்காணிப்பு குழு கூட்டம் கடந்த 2013ம் ஆண்டுக்கு பிறகு நடத்தப்படாத போதிலும் தலைமை செயலாளர் தலைமையில், சமூக நலத்துறை மற்றும் மனித உரிமை பிரிவு ஏ.டி.ஜி.பி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர்  முன்னிலையில் குறிப்பிட்ட கால இடைவெளியில்  கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.  இதுதவிர ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால வரையறையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்படும்  வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

தொடர்ச்சியான ஆய்வு கூட்டங்கள் மற்றும் காவல்துறையின் நடவடிக்கையால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் தேக்கம் குறைந்துள்ளதோடு அத்தகைய வழக்குகளில் தண்டனை விகிதம் அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இனிமேல் ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், மாநில அளவிலான உயர்நிலை கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: