பிஇ, பிடெக் படிப்பு ரேங்க் பட்டியல்: அக்.8ம் தேதி கவுன்சலிங் தொடங்கும்- அமைச்சர் வெளியிட்டார்

சென்னை: பிஇ, பிடெக் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து, அக்டோபர் 8ம் தேதி பொதுப்பிரிவினருக்கான கவுன்சலிங் தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.  தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதனுடன் 458 இணைப்பு பெற்ற  பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக இவற்றில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 877 இன்ஜினியரிங் இடங்கள் உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 60 ஆயிரம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்தனர். இதையடுத்து ரேண்டம் எண்கள் ஆகஸ்ட் 20ம் தேதி வெளியிடப்பட்டது.  இந்நிலையில், நேற்று ரேங்க் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார். அதில் 200க்கு 199.67 என கட்ஆப் மதிப்பெண்கள் பெற்று சஸ்மிதா என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.

நவநீதகிருஷ்ணன் என்ற மாணவர் இரண்டாம் இடமும், காவ்யா என்ற மாணவி 3ம் இடமும் பிடித்துள்ளனர். ரேங்க் பட்டியல் வெளியிட்டு அமைச்சர் அன்பழகன் கூறியதாவது: இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை நடக்க இருப்பதை அடுத்து ஜூலை 15ம் தேதி  முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 1 லட்சத்து 60 ஆயிரத்து 834 பேர் பதிவு செய்திருந்தனர். பதிவுக் கட்டணம் செலுத்தியவர்கள் 1 லட்சத்து 31 ஆயிரத்து 436 பேர், அவர்களில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 88 பேர் சான்று பதிவேற்றம் செய்து, சரிபார்க்கப்பட்டவர்கள். இறுதியாக 1 லட்சத்து 12 ஆயிரத்து 406 பேர் தகுதியுடைவர்களாக உள்ளனர். இவர்களில் மாணவர்கள் 71,469, மாணவியர் 40,922 பேர். பொதுப் பிரிவினர் 1 லட்சத்து 10 ஆயிரத்து 873, தொழில் பிரிவினர் 1533 பேர். விளையாட்டு பிரிவினர் 1409, மாற்றுத் திறனாளிகள் 148, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 853 பேர்.  இவர்களுக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், விளையாட்டு வீரர்–்களுக்கான கவுன்சலிங் அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்படும். பொதுப்பிரிவினருக்கான கவுன்சலிங் அக்டோபர் 8ம் தேதி தொடங்கும். எஸ்சிஏ எஸ்சி மாணவர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 29, 30ம் தேதிகளில் நடக்கும். இந்த கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடக்கும். கல்லூரிகளை பொறுத்தவரையில் 461 கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்கின்றன. 27 பொறியியல் கல்லூரிகள் மூடுவதற்கு அனுமதி கேட்டுள்ளன.  அண்ணா பல்கலைக் கழகம் இரண்டாக பிரிக்கும் போது, அண்ணா பல்கலைக் கழகம் இணைப்பு பெற்ற கல்லூரிகள் ஆகியவை சேர்ந்து தான் புதுப் பல்கலைக் கழகமாக பிரியும்.  

மாநில நிதியின் அடிப்படையில் அண்ணா பல்கலைக் கழகத்தின் தரத்தை உயர்த்த இரண்டாக பிரிக்கப்படுகிறது. இரண்டாக பிரிக்கப்பட்டாலும் இரண்டிலும் அண்ணாவின் பெயர் இருக்கும்.  அண்ணா பல்கலைக் கழக நடவடிக்கைகளில் உயர்கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் நான் பங்கேற்க முடியவில்லை என்று கூறப்படுவது தவறான தகவல். தவறு ஏற்பட்டால் அதை கேட்க கூடிய அதிகாரம் அரசுக்கு இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக கருத்து கேட்பு நடந்துள்ளது. அதன் தொகுப்பு வந்ததும் பாதமாக இருக்கும் கருத்துகளை  நீக்கக் கோரி வலியுறுத்துவோம். அரியர் மாணவர்கள் தேர்ச்சி தொடர்பாக 30ம் தேதிவழக்கு வருகிறது. யுஜிசி, ஏஐசிடிஇ என்ன வழிகாட்டுதல்களை கூறுகின்றனவோ அதை பின்பற்றி முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் தற்போது பல கல்லூரிகள் கொரோனா சிறப்பு மையங்களாக செயல்பட்டு வருகின்றன.

அவற்றில் எந்த கல்லூரி தற்போது செயல்பட வாய்ப்புள்ளது என்று பார்த்து வருகிறோம். அவற்றில் எவை திறக்க சாத்தியம் இருக்கிறதோ அது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும். அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க முடியாது.

கோவை மாணவி முதலிடம்

இந்த ரேங்க் பட்டியலின்படி, கோவையை சேர்ந்த சஸ்மிதா என்ற மாணவி199.67 கட் ஆப் மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். நவநீத கிருஷ்ணன் 199.67 இரண்டாம் இடமும், காவ்யா என்ற மாணவி 199.5 கட்ஆப் பெற்று மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். மாணவர் ஆதித்யா 199.5 கட்ஆப் மதிப்பெண் பெற்று 4வது இடமும், பிரவீன் குமார் 199.5 கட்ஆப் பெற்று 5ம் இடத்தையும், நந்தினி 199.33 கட்ஆட் பெற்று 6ம் இடமும், லோகித்வேல் கோடி கண்ணன் என்ற மாணவர் 199.33 கட்ஆப் பெற்று 7ம் இடமும்,மாணவர் சுதீப் 199.33 கட் ஆப் பெற்று 8ம் இடமும்,  மாணவி ஷியாகிரேஸ் 199 கட்ஆப் பெற்று 9ம் வது இடமும், குணால் வினோத் குமார் ஹிந்துஜா 199 கட்ஆப் பெற்று 10வது இடமும் பிடித்துள்ளனர்.

Related Stories: