தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: தேர்தலுக்கு இன்னும் 7 மாதம்தான் உள்ளது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமையும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: கொரோனா காலத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஒன்றிணைவோம் வா மூலம், மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளை கடந்த 7 மாதமாக சென்று சேர்த்தது திமுக தான். விவசாயிகளுக்காக இங்கே நாம் ஆர்ப்பாட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். முதல்வர், வேளாண் மசோதாவால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்கிறார்.

மசோதாவுக்காக பாஜவின் கூட்டணியில் இருந்த அமைச்சரே ராஜினாமா செய்துள்ளார். பல மாநிலங்களில் விவசாயிகள் களத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், விவசாயிகளுக்கு பிரச்னை இல்லை என்று சொல்கிறார். விவசாயிகள் பிரச்னையை இதோடு விட மாட்டோம். சட்டங்களை திரும்ப பெறும் வரை திமுக போராட்டத்தை தொடரும். விவசாயிகளுக்கு எப்போதும் துணை நிற்போம். இன்னும் 7 மாதம் காலம் தான் இருக்கிறது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும்.

Related Stories: