தாய், மனைவிக்கு சிலை வைத்துகோயில் கட்டிய இன்ஸ்பெக்டர்: மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வீட்டு முன் தாய் மற்றும் மனைவிக்கு சிலை அமைத்து கோயில் கட்டி ஓய்வு இன்ஸ்பெக்டர் வழிபாடு நடத்தி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் மதன்மோகன் (71). ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர். இவரது மனைவி மீனாட்சியம்மாள் (61). இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். இதில் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இந்நிலையில் கடந்தாண்டு உடல் நலக்குறைவால் மீனாட்சியம்மாள் உயிரிழந்தார். கர்நாடகா தொழில் அதிபரை போல், மதன்குமார் தனது மனைவி மீனாட்சியம்மாளுக்கு தத்ரூபமாக சிலையாக வடிவமைத்து வீட்டின் முன் கோயில் கட்டி அதை திறந்து வைத்து வழிபட்டார்.

இதுகுறித்து மதன்மோகன் கூறுகையில், ‘‘மனைவி கொடுத்த ஊக்கத்தால் பணி ஓய்வுக்கு பிறகு மயிலாடுதுறையில் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவராக உயர்ந்துள்ளேன். தன்னுடைய கடின காலத்திலும், மகிழ்ச்சியான நாட்களிலும் என 40 ஆண்டுகள் உடனிருந்த தனது மனைவியின் மறைவை என்னால் தாங்கி கொள்ள முடிய வில்லை. அவரது நினைவை போற்றும் வகையில் மனைவிக்கும், மறைந்த தனது தாய் கமலம்மாள் நினைவை போற்றும் வகையிலும் அவருக்கும் தத்ரூபமாக சிலையாக வடிவமைத்து வீட்டின் முன் கோயில் கட்டினேன். மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று (நேற்று) 2 சிலைகளையும் ஒரே நாளில் திறந்து வைத்து வழிபட்டேன்’’ என்றார்.

Related Stories: