அமராவதி: பாடகர் எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, 51 நாட்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த 25ம் தேதி மதியம் 1.04 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், பெரும்பாலான மாநில முதல்வர்கள் உள்பட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அவரது உடல் நேற்று முன்தினம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில், 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.