சென்னை,:வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கொருக்குப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:விவசாய மசோதாவை எதிர்கட்சிகள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளும் எதிர்க்கின்றனர். பாஜவை சேர்ந்த விவசாய அமைப்புகள்கூட எதிர்க்கின்றன.
இயற்கை பேரழிவுகள் வரும் போதெல்லாம் பிஎஸ்என்எல் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஆனால் மோடி அதற்கு, 4ஜி அலைக்கற்றை உரிமைத்தை வழங்காமல் தனியாருக்கு வழங்கினார். இதனால் பிஎஸ்என்எல் மற்றும் பல தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் நசுங்கி போனது. இதனால், வருங்காலத்தில் இந்தியா முழுவதும் ஜியோ நிறுவனம் மட்டும் செயல்படும் நிலை இருக்கும்.
சிமென்ட் விலையை அவர்களே நிர்ணயித்து கொள்ளலாம் என்று மத்திய அரசு சொன்னது. உடனே சிமெண்ட் நிறுவனங்கள் ஒன்று கூடி விலையை உயர்த்தினார்கள். அதுபோலதான் தற்போது விவசாயிகளையும் விவசாயத்தையும் மத்திய அரசு அழிக்க பார்க்கிறது.
மாநில உரிமைகளை தமிழக அரசு விட்டு கொடுக்கிறது. மாநில உரிமைக்காக குரல் கொடுத்த கலைஞர் அமர்ந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு, தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாநில உரிமைகளை அடகு வைத்து கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.