அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகர் மற்றும் சுற்றுப்புறங்களில் புதிய வீடு கட்டுவதற்கு தற்காலிகமாக மின் இணைப்பை மின்வாரியத்தில் பெற வேண்டும். மின்வாரியம் டேரிப் 6 விகிதப்படி மின் இணைப்பு கொடுக்கின்றனர். பின்னர் வீடு கட்டி முடிக்கப்பட்டவுடன் நிரந்தர மின்இணைப்பு பெற மீண்டும் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து நிரந்தர மின்இணைப்பு பெறவேண்டும். 1ஏ விகிதப்படி வீடுகளுக்கு நிரந்தர மின்இணைப்பு வழங்கப்படுகிறது. இதே போன்று வணிக நிறுவனங்கள்,சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு புதியகட்டிடங்கள் கட்டும் போது தற்காலிக மின்இணைப்பு பெறுகின்றனர். பணிகள் முடிவடைந்தவுடன், நிரந்தர மின்இணைப்பிற்கு விண்ணப்பிக்கின்றனர்.அதற்கு நகராட்சி பகுதியாக இருந்தால் சொத்துவரி ரசீது மற்றும் சில ஆவணங்களை இணைக்கின்றனர். ஆனால், மின்வாரியத்தினர் நகராட்சியிலிருந்து கட்டிடப்பணி நிறைவடைந்ததற்கான சான்றிதழ் வாங்கி இணைத்தால் தான் நிரந்தர இணைப்பு வழங்கப்படும் என மின்வாரியத்தினர் கண்டிப்பு காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.