கார்பரேட் காரர்களுக்கு தான் வேளாண் மசோதா சட்டமாக்கப்பட்டுள்ளது :டெல்லியில் திருச்சி சிவா பேட்டி

புதுடெல்லி : கார்பரேட் காரர்களுக்காக மட்டும் தான் வேளாண் மசோதாக்கல் சட்டமாக்கப்பட்டுள்ளது, விவசாய மக்களைப் பற்றி மத்திய அரசுக்கு கவலை இல்லை என திமுக எம்பி திருச்சி சிவா  நிருபர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். குடியரசுத்தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 3 வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தன்னுடைய இல்லத்தில் கையில் பதாகைகள் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது, பாஜ ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளுக்கு மரியாதை இல்லை. குறிப்பாக எந்த ஒரு முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தாலும் கலந்து பேசுவது கிடையாது.

நாடு முழுவதிலும் உள்ள பல லட்சக்கணக்கான மக்களும், விவசாயிகளும் போராட்டம் நடத்தினாலும், அதுகுறித்து மத்திய அரசு கருத்தில் கொள்ளவில்லை. பல கார்ப்பரேட் காரர்களுக்காகவும், அதுசார்ந்த நிறுவனங்களுக்காக மட்டுமே இந்த வேளாண் சட்டத்தை நிறைவேற்றியுள்ளனர்.மேலும் நாடாளுமன்றத்தில் இரு அவையிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மட்டார் என எதிர்கட்சிகள் அனைவரும் நம்பியிருந்தோம். ஆனால் அவர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மக்களின் குரலை கேட்கும் அரசு அமைந்தால் தான் இந்த நாட்டிற்கு நல்லது நடக்கும். குறிப்பாக இந்த வேளாண் சட்டத்திற்கு எதிராககேரளா மாநில எம்.பிக்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்ய உள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நாங்களும் எங்களது கட்சி (திமுக) தலைமையிடம் ஆலோசனை நடத்தி அதன் அடிப்படையில் ஒரு முடிவை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: