கும்பகோணம் : வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் ஒரே விவசாயி முதல்வர் எடப்பாடி தான் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.வேளாண் மசோதாவை கண்டித்து கும்பகோணத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:மத்திய அரசு தொடர்ந்து மக்களையும், விவசாயிகளையும் பாதிக்கும் சட்டங்களை தான் கொண்டு வருகிறது. தற்போது விவசாய பாதிக்கும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவில் கோடிக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இந்தியாவில் பாரத பிரதமர் மனதின் குரல் நிகழ்ச்சியில் மனசாட்சிக்கு விரோதமான குரலாக பிரதமர் ஒலிக்கிறார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை தமிழகத்தில் ஆதரிக்கிற ஒரே விவசாயி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் தான்.இவ்வாறு அவர் கூறினார்.