எடப்பாடி பழனிசாமி விவசாயியா?: விவசாயிகளை ஏமாற்றி வரும் விஷப்பாம்பு...வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் தாக்கு.!!!

காஞ்சி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சார்பில் காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி களத்துமேடு  பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக, அப்பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் பேசினார். தொடர்ந்து, பாஜக அரசின் வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது என ஸ்டாலின் முழக்கமிட்டார். போராட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், பாஜக அரசும் அதிமுக அரசும் சேர்ந்து விவசாயிகளை வஞ்சிக்கின்றன என குற்றம்சாட்டினார்.

ஏழை தாயின் மகன் என்று கூறிக்கொள்ளும் பிரதமர் ஏராளமான இந்தியர்களை ஏழைகளாக்கி கொண்டிருக்கிறார். தான் விவசாயி என்று கூறிக்கொள்ளும் எடப்பாடி ஆட்சியில்தான் விவசாயிகள் உரிமைகள் பறிபோகின்றன. விவசாயிகளுக்கு விரோதமான செயல்களை பிரதமரும் முதல்வரும் போட்டிப்போட்டுக்கொண்டு செய்கின்றனர். வேளாண் சட்டங்களை  பாஜக கூட்டணி கட்சியே எதிர்க்கிறது. வேளாண் சட்டங்களை ஏற்க மறுத்து பாஜக அரசில் இருந்து அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகி உள்ளார். விவசாயிகள் நலனை பாதிக்கும் என்பதால் பஞ்சாபில் கூட்டணியில் இருந்து  சிரோமணி அகாலிதளம் விலகியுள்ளது.

 பஞ்சாபில், மேற்குவங்கத்தில் என இந்தியா முழுவதும் வேளாண் சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகின்றன. வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடுபவர்களை கைது செய்ய  மாட்டோம் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. மக்களுக்கு எதிரான சட்டங்களை துணிச்சலாக திமுக எதிர்க்கும் என்றார். மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை திமுக மட்டும் எதிர்க்கவில்லை, அகாலிதளம், ஆம்ஆத்மி உள்ளிட்ட பல்வேறு  கட்சிகளும் எதிர்க்கின்றனர்.

விவசாயிகளை ஏமாற்றி வரும் விஷப்பாம்புதான் எடப்பாடி பழனிசாமி என்று கடும் கண்டனம் தெரிவித்தார். குடிமராமத்து திட்டத்தைக் காட்டி பணத்தை கொள்ளை அடிக்கும் எடப்பாடி விவசாயியா?, கிசான் திட்டத்தில் பணத்தை கொள்ளையடித்த எடப்பாடி பழனிசாமி விவசாயியா என்றும் கேள்வி எழுப்பினார். விவசாயக்கடன்களை ரத்து செய்யக்கூறிய உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற பழனிசாமி விவசாயியா? என்று கேள்வி எழுப்பினார்.

Related Stories: