திருச்சி: திருச்சியில் பெரியார் சிலை மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் காவி சாயம் பூசி செருப்பு மாலை அணிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி இனாம்குளத்தூரில் பெரியார் நினைவு சமத்துவபுரம் நுழைவாயில் வளைவில் அவரது மார்பளவு சிலை உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை அவ்வழியாக சென்ற மக்கள், பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி அவமரியாதை செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜெயராம், எஸ்பி ஜெயச்சந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர், காவி சாயத்தை மண்ணெண்ணெய் ஊற்றி அகற்ற போலீசாருக்கு ஐஜி உத்தரவிட்டார்.
இதையடுத்து பொதுமக்கள் ஒத்துழைப்புடன் பெரியார் சிலை மீது இருந்த காவி சாயத்தை போலீசார் அழித்தனர். இந்த தகவலறிந்த திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திகவினர் மற்றும் பொதுமக்கள் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்தவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கட்சியினர் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.