தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா

சென்னை: தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக சென்னை நிகழ்ச்சிகளில் அவருடன் கலந்து கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அச்சத்தில் உள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய மேலிட பொறுப்பாளாராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கடந்த 24 ம் தேதி சென்னைக்கு வந்தார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்த அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சட்ட மன்ற தேர்தல் நெருங்குவதால் ஏராளமான காங்கிரசார்ர் திரண்டு வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் ஆலோசனை கூட்டத்தையும் தினேஷ் குண்டுராவ் நடத்தினார். இந்நிலையில் 25ம் தேதி மாலை விமானம் மூலம் பெங்களுரு புறப்பட்டு சென்றார். அவருக்கு நேற்று முன்தினம் சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து 2 நாட்கள் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் நெருக்கமாக கலந்துகொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் அச்சத்துடன் உள்ளனர்.

Related Stories: