×

வேளாண் சட்டங்களை ஆதரிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு மிகப்பெரும் துரோகம் செய்துள்ளது அதிமுக அரசு: கமல்ஹாசன் அறிக்கை

சென்னை: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள் மூன்றுக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம், பெரும் வணிக முதலாளிகள் விளைபொருட்களை பதுக்கவே வழிவகுக்கும். செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பெரும் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டவே மசோதா வழிவகுக்கும். எந்த மாநில வியாபாரியும் எங்குவேண்டுமானாலும் வேளாண் பொருளை வாங்கலாம் என்பது உழவர்களுக்கு ஆபத்தானது. ஒரு மாநிலத்தில் ஒரு பொருள் விலை உயர்ந்தாலும் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் மாநில அரசால் ஏதும் செய்ய முடியாமல் போகும்.

நாடாளுமன்றத்தில் குரல் வாக்கு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது. கொரோனா காலத்தில் இந்திய உள்நாட்டு மொத்த உற்பத்தி உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு 23.9% சுருங்கிப் போனது. அனால் இந்த வீழ்ச்சியிலும் விழாமல், வளர்ச்சி சதவீதத்தை பதிவு செய்து நம் தேசத்தின் முதுகெலும்பான விவசாயத்துறை மட்டுமே. அந்த விவசாயிகளின் நலன் காப்பது நம் கடமை. அப்படியிருக்க மத்திய அரசு விவசாயிகளின் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பை முன்னிருந்து கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதியன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மூன்று மசோதாக்களை கொண்டு வந்தது.

அதை தொடர்ந்து 3 மசோதாக்களும் மாநிலங்களவையில் நடப்புக் கூட்டத்தொடரில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசின் இந்த மூன்று வேளாண் மசோதாக்கள் சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் என்கின்ற கவலை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. வளர்ச்சியை வரவேற்பதில் என்றுமே முதல் நபராக நான் நிற்பேன். ஆனால் அந்த வளர்ச்சி விவசாயிகளின் நலனை காவு கொடுக்காமல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்.

இந்த சட்டங்களின் ஷரத்துகளை ஆராயும்போது;

1. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020
இச்சட்டத்தின்படி, தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய், வெங்காயம் போன்றவை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும். இதனால் விவாசாயிகள் தானியங்களைச் சேமித்து வைக்க முடியும், எனவே, கூடுதல் விலை கிடைக்கும் என்று கூறுகிறது அரசு. ஆனால், நடைமுறையில், பெரும் வணிக முதலாளிகளே இவற்றை வாங்கிப் பதுக்கி வைத்துக் கொள்கின்றனர். இதன் மூலம் பெரும் நிறுவனங்கள், செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளை லாபம் ஈட்டவே இந்த மசோதா வழிவகுக்கும்.

2. விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020

மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல் சட்டத்தின் மூலம், யார் வேண்டுமானாலும் இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தாலும் விவசாய விளைபொருட்களை வாங்கவும் விற்கவும் முடியும் என்பதால் மாநில அரசாங்கத்திற்கு வரி வருவாய் குறைவதோடு, மாநிலங்களுக்கு இதன் மீதான அதிகாரங்கள் முற்றிலுமாகப் பறிக்கப்படுகின்றன. இதனால், நியாய விலையை நிர்ணயம் செய்யும் வேளாண்மை அதிகாரியின் தலையீடே இல்லாமல் எந்த மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரியும், எங்கு வேண்டுமானாலும் வந்து பொருட்களை வாங்கிச் சொல்லலாம். இதனால் ஒரு மாநிலத்தில் ஒரு பொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், விலை உயர்ந்தாலும் மாநில அரசால் ஏதும் செய்ய முடியாது என்கின்ற ஆபத்தான சூழல் உருவாகி உள்ளது.

இதில் பிரச்சினை என்னவென்றால் மாநில சுயாட்சியை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த அதிமுகவும் இம்மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது, ஒருபுறம் வேடிக்கையாகவும் மறுபுறம் அதிர்ச்சியாகவும் உள்ளது. மத்திய அமைச்சர் ஒருவர் இந்த மசோதாவை எதிர்த்து தன் பதவியையே தூக்கி எறிகின்றபோது, விவசாயி என்று தன்னைக் கூறிக் கொள்ளும் முதல்வர் பழனிசாமி, இந்த மசோதாவுக்கு ஆதரவாக இருப்பது, நம் மாநில விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் இல்லையா?

3. விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020

விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்று விவசாய சேவைகள் சட்டத்தின் மூலம், சாதாரண விவசாயியின் பொருட்களுக்கு விலை உறுதி செய்யப்படும், அதனால், நல்ல விலை கிடைக்கும் என்ற ஆசை வார்த்தைகளைக் கூறும் அரசு, தனியார் பெரும் முதலாளியே விலையை நிர்ணயம் செய்யும் அபாயம் ஏற்படும் என்பதை ஏன் மறைக்கிறது? மேலும், தரம் காரணமாக அந்தப் பொருட்களைப் பெரும் நிறுவனங்கள் வாங்க மறுத்தால், அவர்களை எதிர்த்து ஒரு சாதாரண விவசாயியால் போராட முடியுமா? இதனால் விவசாயிகளுக்குக் கிடைத்து வந்த குறைந்தபட்ச ஆதார விலையையே கேள்விக்குறியாக்கியுள்ளது இந்த மசோதா.

பொதுவாக விவசாயம் என்பது மாநிலப் பட்டியலின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இந்த மசோதா மாநில சுயாட்சிக்கு விரோதமாக இருப்பதுடன், கார்ப்பரேட்டுகளைப் புதிய பண்ணையார்களாகவும், விவசாயிகளைத் தற்காலப் பண்ணை அடிமைகளாக்கும் சூழ்ச்சியே! இவற்றால், கள்ளச்சந்தை பெருகுவதோடு, உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படும். தவிர இம்மசோதாக்களால் தமிழக விவசாயிகளுக்கென்று ஏதேனும் நன்மை இருக்கின்றதா? இச்சட்டங்களால் நீண்ட நெடுநாட்களாகத் தீராமல் கிடக்கும், தமிழக விவசாயிகளின் பிரச்சினைகள் முடிவுக்கு வருமா? என்று ஆராய்ந்தாலும் அதற்கும் விடை இல்லை. வறுமையில் விவசாயம் செய்ய வழி இல்லாமல், கடனால் அன்றாடம் இறந்து கொண்டு இருக்கும் விவசாயிகளுக்கு இந்தச் சட்டங்களால் மேலும் சுமை கூட்டுவது நியாயமா?

மத்திய அரசுக்கு விவசாயிகள் மீது இவ்வளவு அக்கறை என்றால், 2017 ஆம் ஆண்டு நம் தமிழக விவசாயிகள் தலைநகரில் பல நாட்களாகப் போராடியபோது மவுனம் காத்தது ஏன்? விவசாயக் கடன் ஒரு புறம், முறையான நீர் மேலாண்மை இன்றி வறட்சி மறுபுறம், புயல் வெள்ளம் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பற்ற நிலை இன்னொரு புறம் என முற்றிலும் முறையற்ற சூழலைத்தான் விவசாயிகளுக்கு இந்த அரசுகள் தொடர்ந்து பரிசாகத் தந்து கொண்டு இருக்கின்றனர். ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், எட்டு வழிச் சாலை திட்டம் என ஏற்கெனவே இருக்கும் திட்ட முனைப்புகள் மூலம் தமிழக விவசாயிகள் வயிற்றில் அடித்த தமிழக அரசு, விவசாயிகளின் கருத்துகளைக் கேட்காமல் இந்தப் புதுச்சட்டத்திற்கு ஆதரவு அளித்திருப்பதன் மூலம் தமிழக விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் மிகப்பெரும் துரோகத்தைச் செய்திருக்கின்றது ஆளும் அதிமுக அரசு.

எனவே, தமிழக அரசு உடனடியாக தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் இந்தச் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். நம் விவசாயிகள் நலன் காக்க, குடியரசுத் தலைவர் இந்தச் சட்டங்களை நாடாளுமன்றத்திற்குத் திருப்பி அனுப்ப வேண்டும். விவசாயிகள் நலனைப் பாதுகாக்கும் சட்டத் திருத்தங்களுடன், இந்தச் சட்டங்கள் நன்மை பயக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட இதுவே வழிமுறை. தவறும் பட்சத்தில் விதைக்கும் மக்களுக்கு, தங்கள் ஆட்சியைப் புதைக்கவும் வலிமை உண்டு என்பதை மறக்க வேண்டாம் என்று எச்சரிக்கிறது மக்கள் நீதி மய்யம்.

தவறும் பட்சத்தில் உங்கள் ஆட்சியை விதைத்த மக்களுக்கு அதைக் குழிதோண்டி புதைக்கும் வலிமையும் உள்ளது என்பதை இவ்வரசு மறக்க வேண்டாம் என எச்சரிக்கிறது மக்கள் நீதி மய்யம் என கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : government ,AIADMK ,Kamal Haasan , AIADMK government has betrayed the farmers by supporting agricultural laws: Kamal Haasan report
× RELATED சொல்லிட்டாங்க…